ஐபிஎல் தொடரில் 100-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இன்று விளையாடவுள்ளார்.
தில்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நடப்பாண்டின் 40-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் தில்லி கேப்பிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு 100-வது ஐபிஎல் போட்டியாகும்.
யு-19 உலகக் கோப்பைக்கு பிறகு 2018-ஆம் ஆண்டு முதல்முதலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்கிய கில், 2021 வரை அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி கில்லை ஏலத்தில் எடுத்தது. அந்த ஆண்டு 483 ரன்கள் குவித்து குஜராத் அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
2023-ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக 17 போட்டிகளில் விளையாடி 3 சதம், 5 அரைசதம் உள்பட 890 ரன்கள் குவித்து, தொடர் நாயகம் விருதையும் கில் வென்றார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 99 போட்டிகளில் விளையாடி 3 சதம், 20 அரைசதங்களுடன் 3,088 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 25-வது இடத்தில் உள்ளார்.
குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய நிலையில், தற்போது குஜராத் அணியின் கேப்டனாக கில் செயல்பட்டு வருகிறார்.