ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றதை தடுக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் கேப்டனாக ஹார்திக் பாண்டியா வெற்றிகரமாக வழிநடத்தி வந்தார். அறிமுக சீசனிலேயே பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது.
ஐபிஎல் மினி ஏலத்துக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா மும்பை அணியால் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டு பின்னர் அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றதை தடுக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஹார்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்களின் அனுபவத்தை உங்களால் வாங்க முடியாது. அவர்கள் இருவரும் அணியில் இல்லாதது குஜராத் டைட்டன்ஸுக்கு எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால், இதனை கற்றுக் கொள்வதற்கான சூழலாக எடுத்துக் கொண்டு அணியினர் முன்னோக்கி செல்ல வேண்டும்.
குஜராத் அணிக்காக பாண்டியாவை தொடர்ந்து விளையாட வலியுறுத்த ஒருபோதும் நான் முயற்சிக்கவில்லை. அதிகம் விளையாடினால் அதிக அனுபவத்தைப் பெற முடியும். அவர் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர் மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை. குஜராத் அணிக்காக பாண்டியா இரண்டு ஆண்டுகள் விளையாடியுள்ளார். ஆனால், மும்பை அணிக்காக 5-6 ஆண்டுகள் விளையாடியுள்ளார் என்றார்.