இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரிஷப் பந்த்துக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்துக்குப் பிறகு ரிஷப் பந்த் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடத் திரும்பியுள்ளார். அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளதாக பிசிசிஐ தரப்பிலும் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரிஷப் பந்த்துக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரிஷப் பந்த்துக்கு கடினமானதாக இருக்கும். நல்ல விஷயம் என்னவென்றால், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் கொஞ்சம் கிரிக்கெட் விளையாடி பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால், அவரது இயல்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவருக்கு சிறிது கடினமான விஷயமாக இருக்கும். முழங்காலில் காயம் ஏற்பட்டதால் கீப்பிங் செய்வது கடினம். பேட்டிங் செய்வதற்கும் முழங்கால் பிரச்னையின்றி இருப்பது அவசியம். அதனால், ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் நாம் எப்போதும் பார்த்துப் பழகிய ரிஷப் பந்த்தை பார்க்க முடியாமல் போவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸ் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.