ரிஷப் பந்த் ஃபார்முக்குத் திரும்புவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் 15 மாத இடைவெளிக்குப் பிறகு நேற்று (மார்ச் 23) முதல் முறையாக கிரிக்கெட் விளையாடினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ரிஷப் பந்த் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், ஒரு கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் செய்தார்.
இந்த நிலையில், ரிஷப் பந்த் ஒரு சில போட்டிகளில் ஃபார்முக்குத் திரும்புவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தில்லி கேப்பிடல்ஸ் அணியை பந்த் வழிநடத்தி வருகிறார். ரன்கள் எடுக்க அவர் நன்றாக ஓடுகிறார். அவர் சிறப்பாக விளையாடுகிறார். ஒரு சில போட்டிகளில் அவர் பழைய ஃபார்முக்குத் திரும்புவார். மிகச் சிறந்த வீரரான ரிஷப் பந்த் இந்திய அணிக்கு மீண்டும் கிடைத்துள்ளார் என்றார்.