ஹார்திக் பாண்டியா தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லையென மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. வெற்றி பெறும் நிலையில் இருந்தபோதிலும், மும்பை இந்தியன்ஸ் தோல்வியைத் தழுவியது விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், ஹார்திக் பாண்டியா தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லையென மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நீங்கள் ஒரு அணியாக என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை திட்டமிட்டு முடிவெடுக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணிக்காக ஹார்திக் பாண்டியா புதிய பந்தில் பந்து வீசியுள்ளார். அவர் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசியதில் புதிதாக பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. அவர் நன்றாகவே பந்துவீசினார்.
7-வது வீரராக களமிறங்கியது ஹார்திக் பாண்டியாவின் தன்னிச்சையான முடிவு கிடையாது. ஒரு அணியாக எங்களுக்கென திட்டம் உள்ளது. வீரர்கள் எப்போது களமிறங்க வேண்டும் என்பதை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்களது திட்டத்தை குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சரியாக செயல்படுத்த தவறினோம் என்றார்.