ரச்சின், துபே அதிரடி: குஜராத் டைட்டன்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரச்சின் ரவீந்திரா தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே 12 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே நிதானம் காட்டிய ருதுராஜ் 36 பந்துகளில் 46 ரன்கள் (5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஷிவம் துபே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தனர். ஷிவம் துபே தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அறிமுக ஐபிஎல் போட்டியில் களம் கண்ட சமீர் ரிஸ்வி அதிரடியாக 6 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். அதில் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோஹித் சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்குகிறது.