
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதை வருண் சக்கரவர்த்தி கடினமாக்கியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. அந்த அணியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதை வருண் சக்கரவர்த்தி கடினமாக்கியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: வருண் சக்கரவர்த்தி அருமையாக பந்துவீசினார். பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாத அளவுக்கு கடினமாக அவர் பந்துகளை வீசுகிறார். அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் கிராஸ்பேட் ஷாட்டுகளை விளையாட தடுமாறுகின்றனர். நேற்றையப் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுவதை அவர் கடினமாக்கினார் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களில் வருண் சக்கரவர்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பஞ்சாப் அணியின் ஹர்ஷல் படேல் தலா 20 விக்கெட்டுகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.