
ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.
இதையும் படிக்க: தோனி தலைமையில் மீண்டும் சிஎஸ்கே! சேப்பாக்கத்தில் சாதனைகள் என்ன?
விராட் கோலி வரலாற்று சாதனை
தில்லிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 14 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
நேற்றையப் போட்டியில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 1000 பவுண்டரிகள் (721 ஃபோர்கள், 279 சிக்ஸர்கள்) அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ஃபோர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி, அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிக்க: ஸ்ரேயாஸ் ஐயரின் தன்னம்பிக்கை பிடிக்கும்: பஞ்சாப் கிங்ஸ் வீரர்
விராட் கோலி இன்னும் ஒரு அரைசதம் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் 100 அரைசதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவரைச் சேரும். டி20 போட்டிகளில் 100 அரைசதங்களுடன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.