பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது

ஐபிஎல்: குஜராத் அணி படுதோல்வி!

News image

பெங்களூரு அணியினர் - AP

Updated On :26 மே 2026, 11:45 pm IST

ஐபிஎல் 2026 இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அசத்தியது.

தர்மசாலாவில் ஹிமாசல பிரதேச கிரிக்கெட் சங்க விளையாட்டுத் திடலில் செவ்வாய்க்கிழமை(மே 26) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இறுதி ஆட்டத்துக்கான முதலாவது தகுதிச் சுற்று (குவாலிஃபையர் 1) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி அபாரமாக விளையாடி குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

படுதோல்வியடைந்துள்ள ஜிடி, இரண்டாவது தகுதிச் சுற்று (குவாலிஃபையர் 2) ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து எதிரணியை மலைக்கச் செய்தது. கேப்டன் ரஜத் படிதார் அதிகபட்சமாக 33 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.

அடுத்து, இமாலய இலக்கை சேஸிங் செய்ய வேண்டிய முக்கியமான ஆட்டத்தில், ஜிடி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்ஷண் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அவருடன் இணையாகக் களமிறங்கிய கேப்டன் ஷுப்ம்ன் கில் 7 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் போல்டாகி அந்த அணி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தார்.

அவர்களைத் தொடர்ந்து, அடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லரின் அவருக்கே உரிய அதிரடி ஆட்டத்தைப் பார்த்தபோது, இந்த ஆட்டம் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாகச் செல்லும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், ருத்ரதாண்டவம் ஆடிய பட்லர், ஹேசில்வுட் பந்துவீச்சில் போல்டானது 2-ஆவது இன்னிங்சில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் 11 பந்துகளில் அதிரடியாக விளையாடி 29 ரன்களைத் திரட்டினார்.

அவருக்கடுத்து, நிஷாந்த் சந்து, ஜேசன் ஹோல்டர், வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான் என அடுத்தடுத்து விக்கெட்கள் மளமளவென சரிய ஆர்சிபியின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது.

ஆயினும், தனியொருவனாக அணியை மீட்க போராடிய ராகுல் திவேதியா அரைசதம் கடந்தார். திவேதியாவின் அரைசதத்தால் (68) குஜராத் அணியால் படுமோசமான தோல்வியைத் தவிர்க்க முடிந்ததே தவிர தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

கடைசி 4 ஓவர்களில் ஜிடி அணிக்கு தேவைப்பட்ட ரன் ரேட் ‘30.25’ எனும் இமாலய இலக்காக உயர்ந்ததால், குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் அந்த அணியின் வெற்றி எட்டாக்கனியானது. இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பெங்களூரு அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேகோப் டஃபி 3 விக்கெட்களையும் புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம் தார், க்ரூணல் பண்டியா தலா 2 விக்கெட்களையும் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Summary

Royal Challengers Bengaluru won by 92 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.