ஏடிபி தரவரிசை: 3-வது இடத்தில் ஃபெடரர்!
சர்வதேச டென்னிஸ் (ஏடிபி) தரவரிசையில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 5-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 8-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் விம்பிள்டனில் அதிகமுறை பட்டம் வென்றவர் என்று வரலாற்று சாதனையைப் படைத்தார். முன்னதாக 7 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ், வில்லியம் ரென்ஷா ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்ந்திருந்த ஃபெடரர், இப்போது அவர்களைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார். விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தரவரிசையில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ஃபெடரர்.
ரோஜர் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் 5, பிரெஞ்சு ஓபனில் 1, விம்பிள்டனில் 8, அமெரிக்க ஓபனில் 5 என மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் என்ற சாதனையும் ஃபெடரர் வசமேயுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா. இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் கார்பைன் முகுருஸா 7-5, 6-0 என்ற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்தார். விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தரவரிசையில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் முகுருஸா.