ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 94.4 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் இர்வின் 160 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 102.3 ஓவர்களில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே தரப்பில் கிரெமர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி, ஹெராத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவுக்குள்ளானது. சக்கபுவா 6, முஸகன்டா 0, மஸகட்ஸா 7, கிரேக் இர்வின் 5, சீன் வில்லியம்ஸ் 22 ரன்களில் வெளியேற, 17.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஜிம்பாப்வே. இதையடுத்து சிக்கந்தர் ராஸாவுடன் இணைந்தார் பீட்டர் மூர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஜிம்பாப்வே சரிவிலிருந்து மீண்டது. சிக்கந்தர் ராஸா 62 பந்துகளில் அரை சதமடிக்க, பீட்டர் மூர் 89 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சிக்கந்தர் ராஸாவுடன் இணைந்தார் மால்கம் வாலர். பந்தை வீணடிக்காமல் வேகமாக ரன் சேர்த்த வாலர் 54 பந்துகளில் அரை சதம் கண்டார். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே 68 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்தது.
இன்று ஆட்டத்தைத் தொடங்கிய ஜிம்பாப்வே 377 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிக்கந்தர் ராஸா 205 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 127 ரன்களும் வாலர் 98 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் எடுத்தார்கள். இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலங்கை அணி வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தேநீர் இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது.