ரஞ்சிப் போட்டியில் முச்சதம் அடித்து சாதனை செய்த ஹிமாசல பிரதேச வீரர்!
ஹிமாசல பிரதேசத் தொடக்க வீரர் 25 வயது பிரசாந்த் சோப்ரா முச்சதம் அடித்து சாதனை செய்துள்ளார்...


பஞ்சாப்புக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஹிமாசல பிரதேசத் தொடக்க வீரர் 25 வயது பிரசாந்த் சோப்ரா முச்சதம் அடித்து சாதனை செய்துள்ளார்.
தர்மசாலாவில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஹிமாசல பிரதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணி முதல் நாளன்று 2 விக்கெட் இழப்புக்கு 459 ரன்கள் குவித்தது. பிரசாந்த் சோப்ரா 271 ரன்களுடனும் டோக்ரா 99 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் இன்றும் தனது அதிரடியைத் தொடர்ந்த பிரசாந்த் 318 பந்துகளில் ஒரு சிக்ஸர், 40 பவுண்டரிகளுடன் முச்சதத்தை எட்டினார். முதல் தர கிரிக்கெட்டில் அவருடைய முதல் முச்சதம் இது. பிறகு 338 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஞ்சிப் போட்டியின் வரலாற்றில் 10-வது அதிகபட்ச ரன் இது.
இன்று பிரசாந்த் சோப்ராவின் பிறந்தநாள். முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் தனது பிறந்தநாளன்று முச்சதம் எடுத்த மூன்றாவது வீரர் என்கிற பெருமையை பிரசாந்த் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1962-ல் கோலின் கவுட்ரே தனது 30-வது பிறந்தநாளில் முச்சதம் எடுத்தார். அதன்பிறகு இந்தியாவின் ராமன் லம்பா தனது 35-வது பிறந்தநாளில், 1995-ல் முச்சதம் எடுத்தார். மேலும், முச்சதம் எடுத்த முதல் ஹிமாசல வீரர் என்கிற பெருமையையும் பிரசாந்த் அடைந்துள்ளார்.
பிறகு, ஹிமாசல பிரதேசம் அணி, 148 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 729 ரன்கள் எடுத்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
பிரசாந்த் சோப்ரா, இந்தப் போட்டிக்குப் பிறகு இந்தியா ஏ அணியில் இணைந்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளார். இதனால் ஹிமாசல பிரதேசத்தின் அடுத்த ரஞ்சிப் போட்டியில் பிரசாந்த் இடம்பெறமாட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...