
கர்நாடக மாநிலம் பெல்காமில் நடைபெற்று வரும் தக்ஷின் டேர் தேசிய கார்பந்தய போட்டியில் வியாழக்கிழமை நிலவரப்படி 5 முறை சாம்பியன் கெளரவ் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதே நேரத்தில் சாம்ராட் யாதவ் இரு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தில் உள்ளார். பிலிப்போஸ் மத்தாய் இரண்டாம் இடத்தில் உள்ளார். வெள்ளிக்கிழமை கார்பந்தயம் கோவாவில் முடிவடைகிறது.
ஆசியப் போட்டியில் தங்கம், வெள்ளி வென்று வியாழக்கிழமை நாடு திரும்பிய தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு மங்களூருவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் 4-400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம், கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றிருந்தார் பூவம்மா. எனது பதக்கங்களை பெற்றோருக்கும், குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கும் அர்ப்பணிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இந்திய டேவிஸ் கோப்பைக்கான அணியில் உயர்நிலை வீரர் ஜீவன் நெடுஞ்செழியன், பூர்வராஜாவுக்கு பதிலாக ஸ்ரீராம்பாலாஜியை சேர்த்தை நியாயப்படுத்தியுள்ளார் அணியின் கேப்டன் மகேஷ் பூபதி. வரும் 14 முதல் 16 தேதிகளில் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. டி விஜ் சரன், யுகி பாம்ப்ரி ஆகியோர் காயம் காரணமாக டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகி விட்டனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் இத்தாலியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராபர்டோ மான்சினி தலைமையில் போலந்துடன் நேஷன்ஸ் லீக் போட்டியில் முதல் ஆட்டத்தில் இத்தாலி விளையாடுகிறது. அணியில் பல்வேறு மூத்த வீரர்கள் இடம் பெறாத நிலையில் புதிய ரத்தம் பாய்ச்சி யூரோ 2020-க்கு இத்தாலியை தயார்படுத்தும் பொறுப்பு மான்சினிக்கு உள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆசியப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் தஜிந்தர்பால் சிங் டூரின் தந்தை கரம் சிங் இறுதிச் சடங்கு பஞ்சாப் மாநிலம் மோகாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. தஜிந்தர்பால் சிங் தனது தந்தைக்கு இறுதி சடங்கை செய்து வைத்தார்.
யுஇஎஃப்ஏ யூரோ 2020 மற்றும் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் போட்டிகளுக்கான பிரத்யேக தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை இந்தியாவின் சோனி பிக்சர்ஸ் நெட்வார்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக், லா லிகா, சீரி ஏ, சூப்பர் கோப்பை, எஃப் ஏ கோப்பை, இந்திய கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகளின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமாக சோனி நிறுவனம் உள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் ப்ரோ கபடி போட்டிகளின் தூதுவராக நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். விவோ 6-ஆவது சீஸன் ப்ரோ கபடி போட்டிகள் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ரசிகர்களை கவரும் வகையிலும், போட்டிகளை பிரபலப்படுத்தவும் தூதுவராக நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தலைவாஸ் அணி மோதும் ஆட்டங்களில் விஜய் சேதுபதி பங்கேற்று ஊக்கப்படுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




