

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியது. இதன் முதல் ஆட்டம் நேப்பியரில் உள்ள மெக்ளேரன் பார்க் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 38 ஓவர்களில் 157 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 64 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி 3, சாஹல் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது வெயில் காரணமாக ஆட்டம் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கள நடுவர்கள் அறிவித்தனர்.
நேரம் காரணமாக ஒரு ஓவர் பாதிக்கப்பட்ட நிலையில், டக்வர்த் லீவிஸ் விதிமுறைப்படி 49 ஓவர்களுக்கு 156 ரன்களாக வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவன் 75 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். கேப்டன் கோலி 45 ரன்கள் சேர்த்தார். முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் நியூஸிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் 2009-க்குப் பிறகு இந்திய அணி தற்போது தான் முதன்முறையாக வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.