ஆஸ்திரேலியாவில் இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள இந்திய அணி தயார்: பிசிசிஐ
ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்களை டிசம்பர், ஜனவரியில் விளையாடவுள்ளது இந்திய அணி. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடர்கள் நடைபெறாமல் போனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புக்கு ரூ. 1,480 கோடி (196 மில்லியன் டாலர்) நஷ்டம் ஏற்படும்.
எனினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஆஸ்திரேலிய அரசிடம் தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவிருந்தால் பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் பேசியது, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் என்றால் அங்கு இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிட்டாலும் அதற்கு கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐ பொருளாளர், ஆஸ்திரேலிய ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.
சிட்னி மார்னிங் ஹெரால்டுக்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:
வேறு வழியில்லை. ஆஸ்திரேலியாவில் இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைமை எல்லோருக்கும் உள்ளது. கிரிக்கெட் ஆட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இரு வாரங்கள் என்பது நீண்ட காலமல்ல. ஊரடங்கிலிருந்து வெளியே வந்து இன்னொரு நாட்டில் இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்வது என்பது நல்ல விஷயம் தான். ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
இரு அணிகளும் 5 டெஸ்டுகள் விளையாட வேண்டும் என்பது ஊரடங்குக்கு முன்னால் பேசப்பட்டது. ஊரடங்கால் நிறைய நஷ்டம் ஏற்பட்டதால் ஒருநாள், டி20 ஆட்டங்களை அதிகமாக நடத்தி கூடுதல் வருமானம் பார்க்கவேண்டும் என்றுதான் கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.