ஐபிஎல் 14-வது சீசனின் மீதமுள்ள ஆட்டங்கள் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் துணைத் தலைவர் ராஜேஷ் மேனன் சனிக்கிழமை காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவரித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் கேடிச் விலகியுள்ளார். அணியின் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான இயக்குநர் மைக் ஹெசன் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பைக் கூடுதலாக வகிக்கவுள்ளார்.
இதையும் படிக்க | கோலியின் அதகளப் படை இது: பாடம் கற்றுக்கொள்ளுமா இங்கிலாந்து?
ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாவுக்குப் பதில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டேனியல் சாம்ஸுக்குப் பதில் மற்றொரு இலங்கை பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டுள்ளார். ஃபின் ஆலெனுக்குப் பதில் டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய வீரர்கள், உதவிப் பணியாளர்கள், அணி நிர்வாகம் பெங்களூருவில் சனிக்கிழமை கூடுகிறது. இதைத் தொடர்ந்து, 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் 3 முறை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்பிறகு, ஆகஸ்ட் 29-ம் தேதி தனி விமானம் மூலம் பெங்களூருவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகின்றனர்.
மற்ற சர்வதேச வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி கூடுகின்றனர். அங்கு 6 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 2-ம் பகுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 20-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.