விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் பரோடா அணியிடம் தமிழக அணி அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு முதல் மூன்று ஆட்டங்களில் மும்பை, கர்நாடகம், பெங்கால் என பெரிய அணிகளை எளிதாக வென்றது. கடைசி இரு ஆட்டங்களில் புதுச்சேரி, பரோடா என இரு எளிதான அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
புதுச்சேரி அணிக்கு எதிராக 1 ரன்னில் தோற்றது. இந்நிலையில் பரோடாவை இன்று எதிர்கொண்டது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பரோடா அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சால் 39 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரோடா இழந்தது. கிருனால் பாண்டியா அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். எம். சித்தார்த், வாரியர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
மதிய உணவு இடைவேளையின்போது தமிழக அணி, 11.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துத் தடுமாறியது.
எப்படியும் இலக்கை அடைந்துவிடும் என்று எண்ணிய நிலையில் 20.2 ஓவர்களிலேயே 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் பரோடாவிடம் மோசமான தோல்வியை அடைந்தது தமிழக அணி. சஞ்சய் யாதவ் அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்தார். பரோடாவின் பார்கவ் பட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
5 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை எடுத்துள்ளது தமிழக அணி.