விஸ்வநாதன் ஆனந்த் உள்பட செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு
சர்வதேச செஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளது தமிழக அரசு.
2021 ஃபிடே இணைய செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. இந்திய அணியில் விஸ்வநாதன் ஆனந்த், விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, நிஹல் சரின், பிரக்ஞானந்தா, கோனெரு ஹம்பி, ஹரிகா, தானியா சச்தேவ், பக்தி குல்கா்னி, வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.
2020-ம் ஆண்டு ஃபிடே இணைய செஸ் ஒலிம்பியாட் பட்டத்தை இந்தியாவும் ரஷியாவும் கூட்டாகப் பகிர்ந்துகொண்டன.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்குத் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வரை ஸ்டாலினைப் பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட தமிழக செஸ் வீரர்கள் இன்று சந்தித்தார்கள். கடந்த ஆண்டு ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக ரூ. 20 லட்சத்துக்கான காசோலையையும் இந்த வருடம் வெண்கலம் வென்றதற்காக ரூ. 10 லட்சம் காசோலையையும் முதல்வர் ஸ்டாலின் விஸ்வநாதன் ஆனந்துக்கும் இதர வீரர்களுக்கும் வழங்கினார்.
2020 ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், அரவிந்த் சிதம்பரம், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்குத் தலா ரூ. 20 லட்சத்துக்கான காசோலையும் 2021 ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், அதிபன், பிரக்ஞானந்தா, வைஷாலி, சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும் இன்று வழங்கப்பட்டன. மேலும் செஸ் கிராண்ட் மாஸ்டர், செஸ் சர்வதேச மாஸ்டர் தகுதிகளை அடைந்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் உடனிருந்தார்.