
மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா 7-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது.
மகளிர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது.
357 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. நடாலியா சிவர் மட்டும் மறுமுனையில் நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். 213 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறிய நிலையில், 98 ரன்கள் சிவருடன் டீன் இணைந்தார்.
சிவரும் 90-வது பந்தில் சதத்தை எடுக்க, இலக்கை நோக்கி துரிதமாக நகரத் தொடங்கியது இங்கிலாந்து. டீனும் சிறப்பாக ஒத்துழைப்பு தர தேவையான அளவுக்கு இங்கிலாந்துக்கு பவுண்டரிகள் கிடைத்தன. 9-வது விக்கெட்டுக்கு 50 ரன்களைத் தாண்டி விளையாடியதால், இந்த இணை ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலாகத் தென்பட்டது.
ஆனால், 9-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில், டீன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டாக களமிறங்கிய அன்யா ஷ்ரப்சோல் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆட்டமிழந்தார். 43.4 ஓவர்களில் இங்கிலாந்து 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தனிநபராகப் போராடி வந்த சிவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 148 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோர் 27 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 7-வது முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.