இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
சட்டோகிராமில் நடைபெற்று வரும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 86, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தார்கள். தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 2-ம் நாள் முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. மெஹித் ஹசன் 16, எபடாட் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 271 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இந்நிலையில் 3-வது நாளான இன்று வங்கதேச அணி 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எபடாட் 17 ரன்களில் குல்தீப் பந்திலும் மெஹிதி 25 ரன்களில் அக்ஷர் படேல் பந்திலும் ஆட்டமிழந்தார்கள். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் முன்னிலை பெற்றதால் ஃபாலோ ஆன் ஆனது வங்கதேச அணி. எனினும் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி.
3-வது நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 20, ஷுப்மன் கில் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி தற்போது 290 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.