2022 பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா உள்பட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படோஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பிர்மிங்கம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது.
24 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 ஓவர் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா தங்கமும் ஆஸ்திரேலியா வெள்ளியும் வென்றன.
அப்போது, அஜய் ஜடேஜா தலைமையில் இந்திய அணி விளையாடியது. கும்ப்ளே துணை கேப்டனாக இருந்தார். இதே சமயத்தில் மற்றொரு இந்திய அணி கனடாவில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. அசாருதீன், கங்குலி, டிராவிட்,ஸ்ரீநாத் ஆகியோர் கனடாவில் விளையாடிய இந்திய அணியில் இருந்தார்கள்.
1998 காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் அணியில் இடம்பெற்ற வீரர்கள்: ஜடேஜா (கேப்டன்), கும்ப்ளே (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், நிகில் சோப்ரா, ரோஹன் கவாஸ்கர், ஹர்பஜன் சிங், ககன் கோடா, குராசியா, விவிஎஸ் லக்ஷ்மண், பராஸ் மாம்ப்ரே, மொஹண்டி, எம்.எஸ்.கே. பிரசாத் (விக்கெட் கீப்பர்), ராகுல் சங்க்வி, ராபின் சிங்.
லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, கனடாவை வீழ்த்தியது. ஆன்டிகுவா மற்றும் பார்புடா அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி இடம்பெற்ற பிரிவில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறி கடைசியில் வெள்ளிப் பதக்கம் வென்றது. அரையிறுதிக்குத் தகுதி பெறாத இந்திய கிரிக்கெட் அணி வெறுங்கையுடன் திரும்பியது.