தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்கிரமுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மார்கிரமுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்தார்.
இதையும் படிக்க | தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20: இந்தியா முதல் பேட்டிங்
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய எய்டன் மார்கிரம், கடந்த ஜூன் 2-ம் தென்னாப்பிரிக்க வீரர்கள் இந்தியா வந்தபோது, அவர்களுடன் இணைந்து முதற்கட்ட பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதன்பிறகே, அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், முதல் டி20 ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இதனால், இந்த ஆட்டத்தில் அவருக்குப் பதில் அறிமுக ஆட்டக்காரராக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறங்கியுள்ளார்.