சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் பஞ்சாப்பை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஹிமாசலப் பிரதேச அணி.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹிமாசலப் பிரதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர்களான சுமீத் வர்மா 25 பந்துகளில் 51 ரன்களும் ஆகாஷ் வசிஷ்த் 25 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தார்கள்.
கடினமாக இலக்கை எதிர்கொண்ட பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பிரபல வீரர் ஷுப்மன் கில் 45 ரன்களும் அன்மோல்ப்ரீத் சிங் 30 ரன்களும் எடுத்தார்கள். ரிஷி தவான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
விதர்பா - மும்பை அணிகளுக்கு இடையிலான அரையிறுதியில் வெல்லும் அணியுடன் இறுதிச்சுற்றில் ஹிமாசலப் பிரதேச அணி மோதும். 50 ஓவர் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியின் சாம்பியனான ஹிமாசலப் பிரதேச அணி, இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பையையும் வெல்லுமா என்கிற ஆவல் ஏற்பட்டுள்ளது.