என்னை விட அவருக்குத்தான் அழுத்தம் அதிகம்: பாண்டியா
பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பெரிய அளவில் பங்களித்து இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்துள்ளார் ஆல்ரவுண்டர் பாண்டியா.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.
இந்த ஆட்டத்தில் ஹாா்திக் பாண்டியா - பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வா் குமாரும், பேட்டிங்கில் 35 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் அவருக்குத் துணையாக இருந்தனா். பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.
ஆட்டம் முடிந்த பிறகு பாண்டியா கூறியதாவது:
சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நமது ஆயதங்களைப் பயன்படுத்த வேண்டும். நான் நிதானமாக இருக்கும்போது என்னால் இலக்கை அடைய முடியும். நவாஸுக்கு இன்னும் ஒரு ஓவர் மீதமுள்ளது எனக்குத் தெரியும். கடைசி ஓவரில் நமக்கு ஏழு ரன்கள் மட்டுமே தேவை என்றாலும் ஒருவேளை 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் என்னால் அதை எடுத்திருக்க முடியும். என்னை விடவும் பந்துவீச்சாளர் அதிக அழுத்தத்தில் இருந்ததை அறிந்தேன். கடைசி ஓவரில் எனக்கு ஒரு சிக்ஸர் மட்டுமே தேவைப்பட்டது என்றார்.