உலகின் நெ.1 செஸ் மாஸ்டரான மாக்னஸ் கார்ல்சனைத் தோற்கடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இணையம் வழியாக நடைபெறும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் கடந்த பிப்.21 ஆம் தேதி எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா.
இந்தப் போட்டியில் இதற்கு முன்பு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்தார் கார்ல்சன். ஆனால், பிரக்ஞானந்தா, ஏழு சுற்றுகளில் விளையாடி ஒரு வெற்றி, நான்கு தோல்விகள், இரண்டு டிராக்கள் எனச் சுமாராகவே விளையாடியிருந்தார்.
போட்டியின் முடிவில் பிரக்ஞானந்தா கார்ல்சனைத் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தார்.
உலகின் நெ.1 வீரரை பிரக்ஞானந்தா தோற்கடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில் பிரதமர் மோடி 'இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். புகழ்பெற்ற சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் வெற்றி பெற்றதற்காக பெருமைப்படுகிறேன். திறமையான பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.