இந்தியாவில் கரோனா பாதிப்பு குறையாவிட்டால் ஐபிஎல் 2022 போட்டியை தென்னாப்பிரிக்காவில் நடத்த பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021 ஐபிஎல் போட்டி கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் முதல் பாதியும் அதன்பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. இந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்தவே பிசிசிஐ விரும்புகிறது. எனினும் கரோனா பாதிப்பு குறையாவிட்டால் இந்தியாவில் நடத்துவதற்குப் பதிலாக மீண்டும் வெளிநாட்டில் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இதுதொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
எப்போதும் ஐக்கிய அரபு அமீரகத்தையே நம்பிக்கொண்டிருக்க முடியாது. வேறு வாய்ப்புகளையும் பார்க்க வேண்டும். இதனால் ஐபிஎல் போட்டியை தென்னாப்பிரிக்காவில் நடத்தவும் யோசித்து வருகிறோம். அந்த நாட்டின் நேர வித்தியாசமும் வீரர்களுக்குச் சாதகமான அம்சமாக உள்ளது. இந்திய அணிக்குத் தென்னாப்பிரிக்காவில் நல்ல வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. 2-வது டெஸ்டில் இந்திய அணி தங்கிய இடம் பல ஏக்கர்களுக்கு இருந்தது. அங்கு ஒரு குளம் இருந்தது. இதனால் வெளியே வந்து செல்ல வீரர்களுக்கு வசதியாக இருந்தது. கடந்த சில வருடங்களாக கரோனா கட்டுப்பாடுகளால் ஹோட்டல் அறைக்குள் இருந்த வீரர்களுக்கு இது பெரிய மாற்றமாக உள்ளது. எனவே தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் நடத்தவும் வாய்ப்புள்ளது என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்தால் ஐபிஎல் போட்டி வழக்கம்போல இங்கேயே நடைபெறும். ஒருவேளை இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் நடத்த முடியாமல் போனால் இலங்கையில் போட்டியை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.