100-வது டெஸ்டில் விளையாடும் தனது கணவர் விராட் கோலியுடன் மைதானத்துக்கு வந்து பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டார் நடிகை அனுஷ்கா சர்மா.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் மொஹலி மைதானத்தில் தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ் போன்றோர் இடம்பிடித்துள்ளார்கள். ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, இந்திய கேப்டனாக அறிமுகமாகும் டெஸ்ட் இது. கோலி விளையாடும் 100-வது டெஸ்ட், இலங்கை டெஸ்ட் அணியின் 300-வது டெஸ்ட் என மொஹலி ஆட்டம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.
100-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலிக்கு, புதிய தொப்பி ஒன்றை ஆட்டம் தொடங்கும் முன்பு பரிசாக வழங்கினார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இந்நிகழ்வில் கோலியுடன் இணைந்து அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் கலந்துகொண்டார்.