மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்குப் புதிய நெருக்கடி!

இந்தப் புதிய நெருக்கடியை இந்திய வீராங்கனைகள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்?
மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்குப் புதிய நெருக்கடி!

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் தெ.ஆ. அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றாலும் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

வெலிங்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மழை காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஆட்டம் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. தெ.ஆ. அணி 10.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மே.இ. தீவுகள் அணி 7 ஆட்டங்களில் 7 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இதர அணிகளின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். இங்கிலாந்தும் இந்திய அணியும் தங்களது கடைசி ஆட்டங்களில் தோல்வியடைந்தால் மே.இ. தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடும். 

இன்று மழை பெய்யாமல் தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியிருந்தால் இந்திய அணி கடைசி ஆட்டத்துக்கு முன்பே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கும். கடைசி ஆட்டத்தில் தோற்றிருந்தாலும் பிரச்னை எதுவும் ஆகியிருக்காது. 

மழையால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது தென்னாப்பிரிக்க அணிக்குச் சாதகமாகி விட்டது. மே.இ. தீவுகள் அணிக்கும் புது நம்பிக்கையைத் தந்துள்ளது. 

லீக் சுற்றின் கடைசி இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வங்கதேசத்துக்கு எதிராகவும் இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் மோதவுள்ளன. இங்கிலாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் 8 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்துக்கு முன்னேறிவிடும். கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியடைந்தால் முடிந்தது கதை. 6 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறிவிடும். 7 புள்ளிகள் வைத்திருக்கும் மே.இ. தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். அந்த அணி ஆரம்பத்தில் நியூசிலாந்தையும் இங்கிலாந்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தியது. அதன் பலனைத் தற்போது அனுபவித்து வருகிறது. 

இல்லாவிட்டால் இன்று போல மழை பெய்தால் ஒரு புள்ளியைப் பெறும் இந்தியா, நல்ல ரன்ரேட்டைக் கொண்டிருப்பதால்  7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். இந்தப் புதிய நெருக்கடியை இந்திய வீராங்கனைகள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com