டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து தெ..ஆ. டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜைத் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் பும்ராவின் நிலை பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்ததாவது:
உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா இன்னும் விலகவில்லை. இதுகுறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அக்டோபர் 6 அன்று ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது. அக்டோபர் 13 வரை பெர்த்தில் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி, பிரிஸ்பேனுக்குச் சென்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது.