இந்திய அணியில் உள்ள அனுபவமிக்க வீரர்கள் முக்கிய இடங்களில் களமிறங்குவதால் சஞ்சு சாம்சனை 3-வது வீரராக களமிறக்க முடியவில்லை என இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பேட் செய்த சஞ்சு சாம்சன் சர்வதேசப் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 114 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க: பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் மேலும் ஒரு மல்யுத்த வீரர்!
இந்த நிலையில், இந்திய அணியில் உள்ள அனுபவமிக்க வீரர்கள் முக்கிய இடங்களில் களமிறங்குவதால் சஞ்சு சாம்சனை 3-வது வீரராக களமிறக்க முடியவில்லை என இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். துரதிருஷ்டவசமாக அவருக்கு இந்திய அணியின் மூன்றாமிடத்தில் களமிறங்கும் வாய்ப்பை கொடுக்க முடியவில்லை. அந்த இடத்தில் அணியின் அனுபவமிக்க மூத்த வீரர்கள் களமிறங்குகின்றனர். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த மூன்றாவது போட்டியில் அவருக்கு 3-வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் விராட் கோலி களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.