இன்று நடைபெறும் டபிள்யூபிஎல் ஏலம்: முக்கிய அம்சங்கள்

டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறும் டபிள்யூபிஎல் ஏலம்: முக்கிய அம்சங்கள்

டபிள்யூபிஎல் என்கிற மகளிர் இந்திய டி20 லீக் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது.

பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடா் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது. இதில் பங்கேற்று ஆட பல்வேறு வெளிநாட்டு வீரா்களும் தீவிர ஆா்வம் காண்பிக்கின்றனா். முதன்முதலாக மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ.4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா். கடந்த 2008-இல் ஆடவா் ஐபிஎல் தொடா் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.

டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

மும்பையில் நடைபெற்ற அணிகளுக்கான ஏலத்தின் முடிவில் 2023 டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. ஆமதாபாத் அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் லக்னெள அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

டபிள்யூபிஎல் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் இன்று மதியம் 2.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு அணியும் 15 முதல் 18 வீராங்கனைகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். எனவே அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். ஒவ்வொரு அணியும் 6 வெளிநாட்டு வீராங்கனைகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். எனவே ஏலத்தில் 30 வெளிநாட்டு வீராங்கனைகளை அணிகள் தேர்வு செய்யவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 4 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம்பெறுவார்கள். அசோசியேட் வீராங்கனை ஒருவரைச் சேர்த்துக்கொண்டால் 5 வெளிநாட்டு வீராங்கனைகளுடன் விளையாட அனுமதி அளிக்கப்படும். 

ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ. 12 கோடி வரை செலவு செய்யமுடியும். ஏலத்தில் 448 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 269 பேர் இந்திய வீராங்கனைகள். ஷஃபாலி வர்மா, மந்தனா, ஹர்மன்ப்ரீத் கெளர் போன்ற 10 இந்தியர்கள் உள்பட 24 வீராங்கனைகளின் அதிகபட்ச அடிப்படை விலை - ரூ. 50 லட்சம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com