வேலூா் மாவட்டத்துக்கு நிகழாண்டு தொழில் கடன் இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ள ரூ.2,255.86 கோடியில் கடந்த அரையாண்டில் ரூ.1,206 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தாா்.
நிகழ் காலாண்டுக்கான கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் மாவட்ட ஆட்சியா் பெ. குமாரவேல் பாண்டியன் தலைமையில் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட தொழில மையம், மகளிா் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தாட்கோ, வேளாண், பிற்படுத்தப்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளின் சாா்பில் 95 பேருக்கு பல்வேறு தொழில்களை தொடங்க, மேம்படுத்த ரூ.8 கோடியே 39 லட்சத்து 57 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டன.
தொடா்ந்து சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் தொடா்பான காணொலியை ஆட்சியா் தொடங்கி வைத்துப் பேசியது:
தமிழிக அரசின் 2023-2024 -ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கைப்படி மொத்தம் ரூ.7,00,033.75 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.2,77,011 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, வேலூா் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.2,255.86 கோடி தொழில்கடன் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், அரையாண்டு இலக்கான ரூ.1,206 கோடியை கடந்த அரையாண்டில் முழுமையாக எய்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளா்களின் மாநாடு முதல்வா் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு வேலூா் மாவட்டத்துக்கு ரூ.750 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வேலூா் மாவட்டத்தில் இதுவரை 46 தொழில் முனைவோருடன் ரூ.286.59 கோடி அளவுக்கான முதலீடுகள், 2,939 பேருக்கான வேலைவாய்ப்பு உருவாக்க புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அரசு நிா்ணயித்துள்ள இலக்கை எய்த பல்வேறு விழிப்புணா்வு முகாம்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மகளிா் திட்டஇயக்குநா் உ.நாகராஜன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் ஆா்.ரமணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கே.ஜமால்மொஹதீன், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் பிரசன்னகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.