பேட்ஸ்மேன்களின் மனதை சரியாக கணிக்கும் திறன் கொண்ட ஆடம் ஸாம்பா டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.
ஐசிசி இணையதளத்தில் எழுதியுள்ள ஆரோன் ஃபின்ச் இதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஸ்மித் விளையாடவில்லை: ஆஸி. அணியில் 2 மாற்றங்கள்!
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: ஆடம் ஸாம்பா சிறப்பாக செயல்படுகிறார். அவர் ரன்கள் கொடுக்காமல் பந்துவீசும்போது பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. தனது சிறப்பான பந்துவீச்சை ஸாம்பா தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகின் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருகிறார். பனித்துளி உள்ள மோதேரா மைதானத்தில் இங்கிலாந்தின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரது விக்கெட்டை அவர் அற்புதமாக வீழ்த்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் 10 ஓவர்களை வீசிய அவர் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது கிரிக்கெட் பயணத்தில் இந்தப் போட்டியில் மிகவும் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பேட்ஸ்மேன்களின் மனநிலையைக் கணித்து அவர் பந்துவீசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
இதையும் படிக்க: ‘15 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில்..’: மேத்யூஸ் வேதனை
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஆடம் ஸாம்பா அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.