இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த உலகக் கோப்பைத் தொடரில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா.
உலகக் கோப்பையில் லக்னௌவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசல் பெரேரா 78 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து பதும் நிசங்கா 61 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
இதையும் படிக்க: ஷேன் வார்னேவின் சாதனையை நெருங்கும் ஆடம் ஸாம்பா!
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். டேவிட் வார்னர் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் மார்ஷ் மற்றும் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர். மார்ஷ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 52 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின், ஜோஷ் இங்லிஷ் களமிறங்கினார்.
லபுஷேன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜோஷ் இங்லிஷ் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். இருப்பினும், லபுஷேன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் களமிறங்கியது முதலே அதிரடி காட்டி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்குத் தேவையான ரன்கள் குறைந்தன. ஜோஷ் இங்லிஷ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா 35.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. கிளன் மேக்ஸ்வெல் 31 ரன்களுடனும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 3 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் தனது அடுத்தத் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலிய அணி இந்த உலகக் கோப்பையில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது. அதே நேரத்தில் இலங்கையின் தோல்விகள் தொடர்கின்றன. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி மூன்றிலுமே தோல்வியைத் தழுவியுள்ளது.