இந்திய கால்பந்து அணியை ஜோதிடர் தேர்வு செய்தாரா?

முக்கிய போட்டிகளில் விளையாடும் இந்திய கால்பந்து அணியின் வீரர்களை ஜோதிடரின் அறிவுரைப்படி தலைமைப் பயிற்சியாளர் ஈகோர் ஸ்டிமேக் தேர்வு செய்த தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்திய கால்பந்து அணியை ஜோதிடர் தேர்வு செய்தாரா?

முக்கிய போட்டிகளில் விளையாடும் இந்திய கால்பந்து அணியின் வீரர்களை ஜோதிடரின் அறிவுரைப்படி தலைமைப் பயிற்சியாளர் ஈகோர் ஸ்டிமேக் தேர்வு செய்த தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தில்லி புறநகரை சேர்ந்த ஜோதிடர் பூபேஷ் சர்மா என்பவரை இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், பயிற்சியாளர் ஸ்டிமேக்கிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதன்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவேண்டிய வீரர்கள், அந்த ஜோதிடரின் அறிவுரைபடியே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆங்கிய செய்தி ஊடகத்திடம் பேசிய இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் குஷல் தாஸ், 2022 மே மாதம் ஜோதிடருக்கும், பயிற்சியாளருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

ஜூன் 11-ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ‘பிளேயிங் 11’ பட்டியலை இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியுள்ளார்.

ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து, இவர் இன்று நன்றாக விளையாடுவார், இவர் மீது எதிர்பார்ப்பு வைக்க வேண்டாம், இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஜோதிடர் அறிவுரை வழங்கியுள்ளார். போட்டித் தொடங்கும்போது, இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில், மிகவும் சிறந்த வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஏனென்றால், அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் குறிப்பிட்டிருந்ததுதான் காரணம்.

இது மட்டுமல்ல், பிளேயிங் 11 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரரையும் ஜோதிடரே பரிந்துரைத்துள்ளார்.

இதேபோல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற ஜோர்டான், கம்போடியா, ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்கும் கால்பந்து அணியையும் ஜோதிடர் தேர்வு செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு இடையே நடந்த நூற்றுக்கணக்கான உரையாடல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ஒவ்வொரு போட்டித் தொடங்கும் முன்பும், ஸ்டெமக், ஜோதிடரைத் தொடர்பு கொண்டுள்ளார். இந்த தகவல், இந்திய அணியின் தேர்வு முறையில் இருக்கும் வெளிப்படைத்தன்மையையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

கடைசியாகக் கிடைத்திருக்கும் தகவல்தான் அதிர்ச்சிக்கு அதிர்ச்சிகொடுத்திருக்கிறது. அதாவது, கால்பந்து அணியில் விளையாடும் வீரர்களைப் போலவே, அவர்களைத் தேர்வு செய்ததற்கு, ரூ. 12 முதல் 15 லட்சம் வரை ஜோதிடருக்கு கட்டணமும் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com