இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. 3-வது டி20 ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது.
2019-ல் ஆஸ்திரேலியா 2-0 என டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்தியது. அதன்பிறகு 11 டி20 தொடர்களில் தோல்வியடையாமல் உள்ளது இந்திய அணி.
மேலும் இந்தியாவில் இலங்கை அணி இதுவரை ஒரு டி20 தொடரையும் வென்றதில்லை. 4 தொடரில் தோற்று ஒரு தொடரை டிரா செய்துள்ளது.
இதனால் இந்திய அணியின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துமா இலங்கை என்கிற கேள்வி எழுந்துள்ளது. இரு டி20 ஆட்டங்களிலும் இந்திய அணியின் மேல்வரிசை பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை. முதல் டி20யில் தீபக் ஹூடாவும் அக்ஷர் படேலும் 2-வது டி20யில் சூர்யகுமார் யாதவும் அக்ஷர் படேலும் இந்தியாவைக் காப்பாற்றப் பெரிதும் போராடினார்கள்.
56* (22), 45 (27), 33* (18), 74* (38) and 47* (19) என இந்தியாவுக்கு எதிரான கடைசி 5 டி20 ஆட்டங்களிலும் அபாரமாக விளையாடியுள்ளார் இலங்கை கேப்டன் ஷனகா. இந்தியாவுக்கு எதிராக நன்குப் பந்துவீசவும் செய்கிறார். இதனால் இவருடைய பங்களிப்பில் தான் இலங்கை அணியின் வெற்றி உள்ளது.
இந்திய அணியில் பெரிதும் மாற்றம் இருக்காது என நம்பலாம். ராஜ்கோட் மைதானம் பேட்டிங்குக்குச் சாதகமானது என்பதால் இன்றைய ஆட்டத்திலும் நிறைய ரன்களை எதிர்பார்க்கலாம். இந்தியாவின் கேப்டனாக 7 ஆட்டங்களுக்குத் தலைமை வகித்த பாண்டியா, முதல் தோல்வியை மும்பையில் எதிர்கொண்டார். இன்னொரு தோல்வி, இலங்கையின் சாதனையாகப் பார்க்கப்படும். அதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.