வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 455 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இலங்கை - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 531 எடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் நேற்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. ஜாகிர் ஹாசன் 28 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கையைக் காட்டிலும் 476 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேசம் இன்று (ஏப்ரல் 1) மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாகிர் ஹாசன் 54 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். விஸ்வா ஃபெர்னாண்டோ, லகிரு குமாரா மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து, இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கத் தவறினர். தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டினை பறிகொடுத்து வெளியேறினர். இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்துள்ளது.
ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி வங்கதேசத்தைக் காட்டிலும் 455 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.