பாகிஸ்தானுக்கு எதிராக நடுநிலையான இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு இருதரப்பு தொடர்களில் விளையாடியது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை. இருப்பினும், இரு அணிகளும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக நடுநிலையான இடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடத் தயாராக இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது: பாகிஸ்தான் மிகச் சிறந்த அணி என்பதை முழுமையாக நம்புகிறேன். அவர்களிடம் நல்ல பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இந்தியாவும், பாகிஸ்தானும் நடுநிலையான இடத்தில் விளையாடினால், அந்தப் போட்டி மிகவும் நன்றான போட்டியாக இருக்கும். நாங்கள் கடந்த 2007-2008 ஆம் ஆண்டுகளில் கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினோம். எனக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்றார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் கடைசியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.