160 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா; ஆதிக்கம் செலுத்தும் வேகப் பந்துவீச்சாளர்கள்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 15) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேன் பிட் 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பெடிங்ஹம் 28 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் மற்றும் குடகேஷ் மோட்டி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியில் ஜேசன் ஹோல்டர் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நண்ட்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. 17 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை வேகப் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.