/

இந்திய அணிக்கு அபராதம்: 5 ரன்களுடன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து!

ஆடுகளத்தின் நடுவில் சென்று வீரர்கள் விதிமீறலில் ஈடுபடும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் அபராதம்.

News image
Updated On :16 பிப்ரவரி 2024, 11:09 am

DIN

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் நடுவில் இரண்டாவது முறையாக ஓடியதால் இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் எடுக்க ஆடுகளத்தின் நடுவில் ஓடியதால் களநடுவர்களால் 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. போட்டியின் முதல் நாளான நேற்று இதே விதிமீறலுக்காக இந்திய அணியின் ரவிச்சந்திரன் ஜடேஜா கள நடுவர்களால் எச்சரிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று அஸ்வின் மீண்டும் அதே விதி மீறலில் ஈடுபட்டதால் 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஷாட் விளையாடும்போது வீரர் ஒருவர் ஆடுகளத்தில் நடுவில் செல்ல நேர்ந்தால், உடனடியாக அவர் ஆடுகளத்தில் நடுவிலிருந்து ஓரமாக சென்று ரன் எடுக்க வேண்டும். ஆடுகளத்தின் நடுவில் வீரர்கள் ஓடினால், கள நடுவர்கள் ஒரு இன்னிங்ஸில் முதல் மற்றும் இறுதி எச்சரிக்கை கொடுப்பார்கள். அதன்பின்பும் ஆடுகளத்தின் நடுவில் சென்று வீரர்கள் விதிமீறலில் ஈடுபடும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.

இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்பட்டதால் இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் முதல் பந்தினை எதிர்கொள்வதற்கு முன்பே அந்த அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.