இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக அணியில் இடம்பெறாமலிருந்த கே.எல்.ராகுல் மீண்டும் அணியில் இணையவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டிக்காக ராஞ்சி மைதானத்துக்கு இந்திய அணி நாளை செல்லவுள்ளது. 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளார் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல காயத்திலிருந்து மீண்டுள்ள கே.எல்.ராகுல் அணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். வேலைப்பளுவை குறைக்கும் பொருட்டு அவருக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேலைப்பளு மேலாண்மை காரணமாக முகமது சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.