ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து விலகிய அம்பத்தி ராயுடுவின் முடிவை தெலுங்கு தேசம் கட்சி பாராட்டியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு கடந்த ஆண்டு டிசம்பரில் ஆந்திர முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். சில காலம் அரசியலை விட்டு விலகி இருக்கலாம் என முடிவெடுத்துள்ளேன். எனது எதிர்கால முடிவுகள் குறித்து விரைவில் தெரிவிப்பேன் எனப் பதிவிட்டுள்ளார்.
அம்பத்தி ராயுடுவின் இந்த முடிவை ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பாராட்டியுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பதிவிட்டிருப்பதாவது: ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி போன்ற ஒருவருடன் உங்களது அரசியல் பயணத்தை தொடராதது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களது எதிர்கால முடிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனப் பதிவிடப்பட்டுள்ளது.