விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பெறாமலிருந்த இருவரும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அணிக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் விளையாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி டி20 அணியில் இடம்பெற்றதில் எனக்கு எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டி20 அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை மாதங்களாக டி20 அணியில் விளையாடி வந்த இளம் வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போகும் என்ற விமர்சனத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அனுபவமிக்க விராட் மற்றும் ரோஹித் சர்மா அணியில் இருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றார்.