வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (மார்ச் 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் பேட் செய்தது.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 86 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக தாசுன் ஷானகா 19 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் முஸ்தபிஷூர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 19.4 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிஷாத் ஹொசைன் அதிரடியாக 30 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக டஸ்கின் அகமது 31 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை தரப்பில் நுவான் துஷாரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், தனஞ்ஜெயா டி சில்வா, மஹீஷ் தீக்ஷனா மற்றும் தாசுன் ஷானகா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. நுவான் துஷாரா ஆட்டநாயகனாகவும், குசால் மெண்டிஸ் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.