குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்ற தலைப்பில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை செய்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் அண்டை நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத மதத்தினர் இனி இந்தியாவில் சுலபமாக குடியுரிமையைப் பெறும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களைத் தவிர்த்து உருவான இந்தத் திருத்தச் சட்டத்தைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான தனிஷ் கனேரியா தன் எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான் ஹிந்துக்கள் இப்போது திறந்த வெளியில் சுவாசிக்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட சிலர், ‘கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது போன்றா’? என அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஹிந்துவான தனிஷ் கனேரியா, பாகிஸ்தான் அணிக்காக 2000 - 2010 வரை விளையாடினார். இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடரின்போது அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனிஷ் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை விதித்தது.
தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தனிஷ் கனேரியாவுக்குத் தடை விதித்து அவரை அணியிலிருந்து வெளியேற்றியது. ‘ஹிந்துவாகப் பிறந்தேன், ஹிந்துவாகவே இறப்பேன்’ என சில ஆண்டுகளுக்கு முன் தனிஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.