
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் கமிண்டு மெண்டிஸ் தலா 102 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் நஹித் ராணா மற்றும் காலேத் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தைஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் விஸ்வா ஃபெர்ணாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரஜிதா மற்றும் லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 164 ரன்கள் எடுத்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து தனஞ்ஜெயா டி சில்வா அதிகபட்சமாக 108 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் மிராஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம், இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் மோமினுல் ஹாக் அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். விஸ்வா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், லகிரு குமாரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இறுதியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனஞ்ஜெயா டி சில்வா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.