ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
ஆசிய சாம்பியன்ஸிப் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் சீனத்தின் ஹுலுன்பியர் நகரில் செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் மலேசியா அணியை எதிர்கொண்ட இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை ஊதித் தள்ளியது.
இந்திய அணித் தரப்பில் அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்த ராஜ் குமார் (3-வது, 25-வது மற்றும் 33-வது நிமிடம்), அராய்ஜீத் சிங் ஹண்டால் (6-வது மற்றும் 39-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (7-வது நிமிடம்), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (22-வது நிமிடம்), மற்றும் உத்தம் சிங் (40-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
மலேசியா தரப்பில் அகிமுல்லா அனுவார் (34-வது நிமிடம்) ஒரேயொரு கோல் மட்டும் அடித்தார்.
இந்தியா தற்போது 3 வெற்றிகள் 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் இந்தத் தொடரில், ரவுண்ட்-ராபின் லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அரையிறுதி ஆட்டங்கள் வருகிற 16-ஆம் தேதியும், இறுதிப் போட்டி 17-ஆம் தேதியும் நடைபெற இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.