
பார்ட்டி, கேளிக்கையில் பங்கேற்கிறேனா? செய்தியாளர்கள் சந்திப்பில் கோபமான சபலென்கா!
உலகின் நம்.1 டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்காவின் பேட்டி குறித்து...

அரினா சபலென்கா - படம்: ஏபி
டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா யுஎஸ் ஓபனின் இரண்டாவது சுற்று வெற்றிக்குப் பிறகு அளித்த பேட்டியில் செய்தியாளர்களின் கேள்விக்கு கடுமையாகப் பேசியது வைரலாகி வருகிறது.
இரண்டாவது சுற்றில் பெலாரஸின் அரினா சபலென்கா - ரஷியாவின் போலினா யாட்செங்கோ உடன் மோதினார். இந்தப் போட்டியில் சபலென்கா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அசத்தினார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் பொறுமையை இழந்த சபலென்கா பேசியது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பொதுவாகவே சபலென்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகமாக கடற்கரை சுற்றுலாவில் இருப்பதாகவும் மது அருந்துவது போல் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இதனால், அவர் சமீபத்தில் பெரிய வெற்றிகளைப் பெறாமல் இருப்பதாக அவர்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஒரு செய்தியாளர் சபலென்காவிடம், “யுஎஸ் ஓபன் தொடங்கிவிட்டது எப்படி உணர்கிறீர்கள்? கடந்த வாரம் அதிகமான பார்ட்டிகள் இருந்தன; அதனால் உங்களது கவனம் சிதறவில்லையா?” எனக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த சபலென்கா, “இதெல்லாம் என்ன மாதிரியான கேள்வி? நீங்கள் நகைச்சுவை மாதிரி கேட்கிறீர்கள். பார்டி? கேளிக்கை? ஏன் அப்படி கேட்டீர்கள்? எப்படி அப்படி சிந்திக்கிறீர்கள்? நான் சில பிராண்டுகளுடன் இணைந்து சில புகைப்படங்களைப் பகிர்வதால் என்னை பார்ட்டி செய்பவர் என நினைக்கிறீர்களா?” எனக் கடுமையாகப் பேசினார்.
இரண்டாவது சுற்றில் 53 நிமிஷங்களில் அபார வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு சபலென்கா செய்தியாளர் சந்திப்பில் பேசியிருப்பதாவது:
நான் சிறப்பாக விளையாடியதற்கு மகிழ்ச்சி. கடினமாக உழைத்து வருகிறேன். ஆனால், களத்தில் நேர்த்தியாக இருப்பதில் இருந்து விலகிவருவது போல உணர்கிறேன்.
நம்மால் முழுமையான நேர்த்தியுடன் விளையாட முடியாது என்பது தெரியும். தற்போதைக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். என்னில் கவனமாக இருப்பதை மகிழ்கிறேன். என்ன நடந்தாலும் கவலைப்படாமல் தொடர்ச்சியான முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறேன் என்றார்.
Summary
Aryna Sabalenka loses cool at reporter over ‘partying and fun’ question
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





