திருவண்ணாமலை, அக். 8: உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறும் தே.மு.தி.க.வினர் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறினார்.
திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேமுதிக வேட்பாளர் மணிகண்டன் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து அவர் காந்தி சிலை அருகில் சனிக்கிழமை பேசியது:
திருவண்ணாமலை நகரம் புண்ணியத் தலமாக உள்ளது. இங்கு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை. கிரிவலப்பாதையில் கழிப்பிட வசதிகூட இல்லை. அப்பகுதி இருளாகக் காட்சி தருகிறது.
பல ஆண்டுகளாக உள்ளாட்சிப் பதவிகளில் பெரும்பாலும் திமுக, அதிமுகவினரே இருந்து வருகின்றனர். ஏற்கெனவே பதவியில் இருந்தபோது அடிப்படை வசதிகளைச் செய்யாமல் மீண்டும் வெற்றி பெற்றால் அவற்றை நிறைவேற்றுவோம் என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பேன். லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுப்பேன். கடந்த பேரவைத் தேர்தலில் தேமுதிகவால் பலன் பெற்றது அதிமுக. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை புறக்கணித்து விட்டது. உள்ளாட்சி நிர்வாகம் வெளிப்படையாக நடைபெற தேமுதிக கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றார் விஜயகாந்த்.
டி.சுரேஷ்குமார் எம்எல்ஏ, மாவட்டச் செயலர் தமிழன்னை பாபு, துணைச்செயலர் வி.எம்.நேரு உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









