பழனியில் மணல் கடத்தல் தொடர்பாக நகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் மணல் திருட்டு அதிக அளவு நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பழனியில் நகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவரும் மணல் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். பழனி பழைய தாராபுரம் சாலையில் புதன்கிழமை வருவாய்துறை ஆய்வாளர் மகேஷ் வாகன தணிக்கையில் இருந்த போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியில் எந்த அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து லாரி டிரைவரிடம் ஆவணங்கள் கேட்டுக் கொண்டிருந்த போது லாரியின் உரிமையாளரும், நகராட்சி ஒப்பந்ததாரருமான பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த ராமசாமி(50) சம்பவ இடத்துக்கு வந்து வருவாய்துறையினருடன் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மகேஷ் பழனி டவுன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் நகராட்சி ஒப்பந்ததாரர் ராமசாமி மற்றும் லாரி டிரைவர் வில்வாதம்பட்டியை சேர்ந்த மாயவன்(28) ஆகியோரை மணல் கடத்தல், அரசு அலுவலரை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ராமசாமி மீது முன்னரே பழனி-திண்டுக்கல் சாலையில் சாக்கடைப்பணியின் போது அனுமதியின்றி வெடிகுண்டு வைத்து பாறைகளை உடைத்ததில் ஒரு வீடு சேதமான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.